Wednesday, December 16, 2009

ஊழல்களின் தேசம் !



நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Edmond Burke


1993 மும்பை குண்டு வெடிப்பின் போது

இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.


1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.

250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது.

1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ?

மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா.

மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.

அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர்.


இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.



சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.



காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.

நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.



1993 வி.கே.கிருஷ்ண மேனன்.


சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது.

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது.

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.


1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.


அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.


அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?

நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி.



1993 பெரோஸ் காந்தி


1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது.

ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.

நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.


முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள்.


பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள்.

நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார்.


1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.

1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார்.


அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார்.

பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.


1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.


1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.


1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.


1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை.


இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல்.


1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது.


இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை.


காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார்.

இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.


இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.



ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.

இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.


1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்


அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது.

இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.
தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல்,

1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,

1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,

1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,

2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,

2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,

2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,

2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,

2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,

2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள்.

இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.


சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.


இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ?

பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.

எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர்


வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.

Monday, December 7, 2009

சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?

சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? எதுவாக இருக்கப் போகின்றார் சீமான். பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, உங்கள் பிள்ளை சீமான் வந்திருக்கின்றேன் என ஏறும் மேடைகளில் முழங்கும் சீமானை ஆர்பரித்துக் கைதட்டி வரவேற்கிறது இளைய தமிழகம். உணர்வும், ஆர்வமும் தமிழின்பால் கொண்டிருக்கும் இளைஞர் சீமான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிராமத்துப் பேச்சுமொழியும், தோற்ற நெருக்கமும், உணர்ச்சிப் பேச்சும் சீமான் பால் தமிழ இளைஞர்கள் கவரப்படும் சாத்தியங்களை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் தன்னை ஆர்பரித்து வரவேற்கின்ற இளைய தலைமுறையை எவ்விதம் வழிநடத்தப் போகின்றார் சீமான் ?. அவர்களுக்கு இவர் என்ன சொல்லப் போகின்றார், என்ன செய்யப் போகின்றார் என்பதில்தான் இவரது அரசியல் எதிர்காலமும், இவரை வரவேற்போர் அரசியலும் இருக்கப் போகிறது என்பதுதான நிச்சயமான உண்மை.

இந்த உண்மையின் தாத்பரியத்தை சீமான் உணர்ந்திருக்ககின்றாரா என்பது சரிவரத் தெரியவில்லை. வரும் மே மாதம் அவரது 'நாம் தமிழர் ' இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது செயலின் வீரியம் சிலவேளை புரியவும் கூடும். சிறந்த பேச்சாற்றலும், நிறைந்த தமிழுணர்வும் கொண்டுள்ள சீமானின் அரசியற்பிரவேசம் அர்த்தமற்றதாக போய்விடக் கூடாதென்பதற்கான அக்கறையில் வருகிறது இச்சிறப்புப் பார்வை.

தமிழக அரசியலில் சிறந்த பேச்சாளர்கள், நிறைந்த அரசியற் பிரபலம் பெற்றமை வரலாறு. குறிப்பாகக் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் பலம் பெறுவதற்கான அடிப்படைகளில் அது ஒன்று என்ச் சொன்னால் மிகையாகாது. அண்ணா, கலைஞர், வை.கோ, என்ற வரிசையில, தன் பேச்சாற்றலால் இளைஞர்களைத் திரள வைக்கும் திறமை பெற்றிருக்கின்றார் சீமான் என்பது அவரது அன்மைக்காலப் பேச்சுக்களுக்கு காணப்படும் இளைஞர்களின் ஆர்வத்தில் தெரிகிறது. அந்த இடத்திலேதான் அவரது சமுகங்குறித்த அக்கறைபற்றியும், அரசியல்பற்றியம் கேள்வியும் எழும்புகிறது.

முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது. 'பேச்சும் ஒரு ஆயுதம், ஆதலால் இளைய தலைமுறையிடம் போ, அவர்களிடம் பேசு' எனப் பிரபாகரன் தனக்குக் கட்டளையிட்டதாக மேடைகள் தோறும் கூறிவருகின்றார் சீமான். அப்படிக் கூறும் அவர் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய மற்றொரு விடயம், மக்கள் அரசியலற்ற ஆயுதம், போராட்டத்தில் வெற்றி தராது என்பதை. இதைப் பிரபாகரனின் களத்திலிருந்தம் தெரிய முடியும், வை.கோ வின் இடத்திலிருந்தும் புரிய முடியும்.

ஆகவே உணர்ச்சிப் பெருக்கான பேச்சுக்களால் உடன் திரளும் இளைஞர்களை, உருப்படியான மக்கள் அரசியலாளர் ஆக்குவதற்குரிய பணிகளை ஆரம்பத்திலிருந்தே கவனத்திற் கொள்ளவேண்டும். அப்படியில்லாது கிராமங்கள் தோறும் மேடைகள் போட்டு உணர்சிப்பேச்சுக்களை உரக்கப் பேசுவதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டால். விடிய விடியத் திருவிமாக் கூத்து ஆடியதற்கு ஒப்பாகவிடும் உங்கள் பேச்சுக்கள்.

உண்மையில் பாரிய அரசியல் நகர்வொன்றினை நிகழ்த்த நீங்கள் திட்டம் கொண்டிருந்தால் இன்னமும் ஆழ்ந்து செயற்படுவதே பலன்தருவதாகும். அதுவன்றி கூவிக் குரல் எழுப்புவதால் உங்கள் எண்ணம் ஈடேறாது. ஏனென்றால் நீங்கள் எல்லாப் பக்கங்களிலும் குறி வைக்கப்படுகின்றீர்கள் என்பது உண்மை. அதற்குக் காரணம், அரசியல் பொய்மைகளில் மனம் புழுங்கிப் போயுள்ள, தமிழகத்தின் இளைய சமுதாயம், உங்கள் பின்னால் அணிதிரளும் வாய்ப்பு உள்ளதென்பதே.

ஈழ அரசியல் குறித்தும் , தமிழக அரசியல் குறித்தும், அனைத்து அரசியல்வாதிகளிலும் அதிருப்தியுற்றே இளைய தமிழகம் இருக்கிறது என்பதற்க சிறப்பான உதாரணம் முத்துக்குமரன் இறுதி நிகழ்வு. அதுபோல் கொந்தளித்துப்போயுள்ள அந்த இளைய தலைமுறைத் திரட்சியை, ஒருங்கமைத்து வழிநடத்தக் கூடிய, சுயநலமற்ற, நடைமுறை அரசியற்தலைமை இல்லாதிருப்பது அவலம். இநத் அவலத்துள் ஆட்பட்டிருக்கும் இளைய சமூகம் எங்கே உங்கள் பின்னால் அணி திரண்டுவிடுமோ என்ற அச்சம் அனைத்து அரசியற் தரப்பிலும் எழுந்தேயிருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள் என்பதே முக்கியமான கேள்வி?

ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலைக்குப் பின்னதாக, அந்தக் கொலைகளின் துரோகம் குறித்து, வெளிப்படையாகப் பேசும் ஒரு சில குரல்களில், ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலாக தெரிவது சீமானின் குரல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீமானின் உரத்த குரலில் வெளிப்படும் உணர்ச்சிப் பேச்சுக் கேட்கத் திரளும் மக்கள் மத்தியில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட ஊடகங்களினால் மறைக்கப்பட்ட தமிழினத் துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் துரோகங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவதும் அவர்தான்.

தமிழகத்தில் அரசியற்துரோகங்களால் அல்லற்பட்டும், தமிழனாக அவமானப்பட்டும் நிற்பதாகக் கருதும் எவனுக்கும் சீமானின் வார்த்தைகள் உயிர்ப்பூட்டுகிறது.

இயல்பாகவே எழும் கிராமத்துக் கோபம் மிக்கச் சீமான், சினிமாக்காரனாகச் சிரித்தபடிதான் திரிந்தார். ஆனால் அவரைச் சீண்டி, சினந்தெழுந்த கிராமத்தான் மாற்றியவர்கள், அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்தான். அவர்களது அராஜகங்களால் அடிபட்டு நொந்து போய்கிடந்த இளைய சமூகத்துக்கு, சீமானின் குரல் தன் குரலாய் தெரிகிறது. அதனால் அவர் பின்னே திரளுகின்றனர். திரளுகின்ற அந்த இளைய தலைமுறையை எப்படி பயனுள்ள போராட்ட சக்தியாக மாற்றப் போகின்றார் என்பதிலேயே சீமானின் எதிர்காலமும், அவரின் பின்னால் அணிதிரளும் இளைய சமூகத்தின் எதிர்காலமும் இருக்கிறது. அந்த அவதானிப்பில் தான் பின் வரும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தனது முதற் சுட்டியாக எடுத்து தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை மையப்படுத்த முனையும் சீமான் கவனத்திற் கொள்ள வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இந்தப் பத்தியில் தர முடியாது போனாலும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்ய முனைவது நோக்கமாகின்றது.

தமிழக அரசியலில் தனித்துவமான சக்தியாக மாறவிழையும், சீமானும் , அவரது நாம் தமிழர் இயக்கமும் பயனிக்க வேண்டிய தூரம் நெடுந்தொலைவு. இந்த நெடுதூரப் பயணத்திற்கும் , தமிழக அரசியற் சக்தியாக அடையாளப்படுத்துவதற்கும், ஈழவிடுதலைப்போராட்ட எண்ணப்பாடு மட்டும் போதுமானதாக இருக்காது. தமிழகமக்கள் பலருக்கும் ஈழத்தமிழ்மக்கள் மீது கரிசனமும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறையும், நிறைந்த தமிழுணர்வும் இருந்தாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அது மட்டும் போதென்பதே தமிழகத் தேர்தற் களம் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடம். அதனாலேதான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிவரும் எவரும் தேர்தல் வரும்போது, பெரிய கட்சிகளுக்குள் சரண்புகுந்துகொள்கின்றனர்.

இதற்கு தமிழக அரசியலில் சிறப்பான உதாரணமாகச் சொல்லக் கூடியவர்கள் இருவர். முதலாமவர் நீண்டகாலமாக ஈழப்பிரச்சனையை எடுத்துப் பேசிவரும் மதிமுக செயலர் வை.கோபால்சாமி. மற்றையவர் விடுதலைச்சிறுத்தைகளி்ன் தலைவர் தொல். திருமாவளவன். ஈழப்பிரச்சனை, தமிழுணனர்வு என்பன குறித்து எழுச்சிமிக்க கருத்துக்களை எவ்வளவு தூரம் தமிழக மக்களிடம் முன்வைத்து நின்றாலும், தேர்தற்களமொன்றைக் காணும் தருணத்தில் , இவர்கள் தடுமாறிப்போவது தொடர்ச்சியாக நிகழ்ந்தே வருகிறது. இதற்குக் காரணம் தேர்தற்களத்தில் வெற்றியைத் தரக் கூடிய வாக்குக்களைப் பெற்றுக் கொள்ளும் காரணியாக ஈழப்பிரச்சனையோ, தமிழுணர்வோ மட்டும் அமைந்துவிடவில்லை என்பதே .

இந்த அரசியல் நிலை அவர்களுக்கு மட்டுமல்ல, சீமானுக்கும் பொருந்தும், ஏன் வேறு யாருக்கும் கூட ஏற்படலாம். 1983ல் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த அரசியற் போராட்டங்களில் ஈடுபட்ட ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்து, தலித் மக்கள் பிரச்சனையையும் இணைத்துக் கொண்ட தொல். திருமாவளவனால், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் எதுவும் செய்ய முடியாது போய்விடுகிறது. இதற்காக அவரது ஈழ ஆதரவினைக் குறைத்து மதிப்பிட முடியாது. இவரது அரசியற் பிரவேச காலத்தையும், இப்போதுள்ள காலத்தையும், தமிழக அரசியலில் நிலைகொள்வதற்கான வாக்கு வங்கியை உருவாக்குவது குறித்தும் , சீமான் அதிக கவனம் கொள்ள வேண்டியதும் அவசியம். உன்மையில் இதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்கள் வேறு சிலவும் இருக்கின்றன. ஆயினும் மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதாலும், அரசியற் பிரவேச நிலையில் நிற்பவர் சீமான் என்பதாலும் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.

அரசியலில் நிலை கொள்ள மிகஅவசியமானது தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் வாக்குகள். தமிழகத்திற்கென்றில்லாது உலகத்தக்கே பொதுவான விதியது. ஆனாலும் தமிழகத்தில் இந்த வாக்கு வங்கிகளாக இருப்பவை சாதிய அமைப்புக்கள். இந்த விதியினை உடைத்து, தமிழர் எனும் பொதுமையைக் காணவிழையும் சீமானின் முயற்சி புதுமையானதும் வரவேற்கத் தக்கதும். கட்சி கடந்த ஒரு பொதுமையை கண்டடைவது என்பது பேசுவது போல் ஒன்றும் இலகுவானதல்ல. அதற்கு வேண்டிய களமும், காலமும் மிகப் பெரியது.

'என் பின்னால் மூன்று இலட்சம் தம்பிமார் இருக்கிறார்கள் ' என மேடைகளில் சொல்வது புலம் பெயர் தமிழர்களின் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் தமிழக அரசியலில் மாற்றம் தருவதற்கு,இந்த தொகையின் பத்துமடங்கு திரண்டாற் கூட, அது சொற்பமா கத்தான் இருக்கும். இப்படிச் சொல்வது சீமானால் அப்படியொரு நிலையை எய்துவிட முடியாது எனும் பொருளல்ல. மாறாக இன்னமும் செல்ல வேண்டிய தொலைவின் நீட்சியைச் சுட்டவே.

மேலும் திருமாவளவன் ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துப் பேசி கட்சி வளர்த்த காலத்தில், தமிழக, மத்திய அரசுகளின் ஈழநிலைப்பாட்டிற்கும் தற்போதுள்ள நிலைப்பாட்டிற்குமான களநிலை நேரெதிரானது. அதுபோலவே ஈழத்தில் அப்போதிருந்த போராட்ட முனைப்புச் சூழ்நிலை முற்றாக மாறி, தேக்கநிலையே காணப்படுகிறது. நீளப் பயனிக்க நினைக்கும் சீமான் நிச்சயம் இந்த நிலைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடக்கப்பட்டதற்கே, உலக வரைபுகளில் உரைக்கப்பட்ட நியாயம் 'தீவிரவாதம்' என்பதே. அப்படி இருக்கையில், அரசியற' கட்சியாகப் பரிமளிக்கவிரும்பும் சீமான், தனது மேடைப்பேச்சுக்களில் குண்டுகளாய் வெடிப்போம் என்பதும், மாற்று இனம் மீது வஞ்சம் தீர்ப்போம் எனச் சூளுரைப்பதும், அவரை அடக்க நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். அதைவிடவும், வெடிப்போம் அழிப்போம் என்பதனை கட்சிக் கொள்கையாகக் காட்முடியுமா? அல்லது அதையொரு போராட்ட நடைமுறையாகக் கொள்வதானல் கூட, ஈழத்தில் இது இனிச் சாத்தியமில்லை என்றுதானே விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்தார்கள் என்றார்கள். அப்படியிருக்கும் போது அந்த வடிவத்தை உயிர்பிப்பதாகக் கூறுவது நடைமுறைச் சாத்தியமானதா?.

இவ்வாறு சீமான் உரைக்கும் போதேல்லாம், சீமானும் சரி , அந்த உரைக்கு அக மகிழ்ந்து கைதட்டுவோரும் சரி சுலபமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். இத்தகைய உரைகளும், உணர்ச்சி வசப்படுதல்களும், சிங்களத்தால் சிறைப்பட்டுக் கிடக்கும் போராளிகளின் முன் உள்ள சிறைக்கதவுகளில் மேலும் கம்பியினை பொருத்திவிட உதவுகின்றார்கள் என்பதனை.

மேலும் பிரபாகரன் என் தலைவன் எனக் கூறும் சீமான, புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம், 83ல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்த போதும், 83க்கு முன்னர் சில ஆண்டுகளும், பின்னர் 85 வரையிலும் தங்கள் செயற்பாடுகளை மிக அமைதியாகவும், இரகசியமாகவும் வைத்திருந்தார்கள் என்பது. ஆக சரியான காலம் வரும் வரையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின் சக்தி என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை.அது ஒரு இரகசிய இயக்கத்திற்குச் சரியான நடைமுறை. ஆனால் அரசியல் இயக்கமாக மலர நினைக்கும் சீமானின் 'நாம் தமிழர்' அப்படி அமைய முடியுமா எனக் கேட்டால், அது அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெறும் வரையிலாவது அந்த நடைமுறை அவசியம் என்றே சொல்லலாம்.

தனது அரசியற் பிரவேசத்திற்கு உணர்ச்சிகரமான தனது பேச்சுத் திறனை அடித்தளமாக சீமான் இடுவதில் தவறில்லை. ஆனால் அந்தஅடித்தளத்திலிருந்து கோபுரமாக உயர உரைகள் மட்டும் போதுமானதாக இல்லை. அப்படி அது போதுமென்பது உண்மையானால், திமுகவிலிருந்த போதே தனது சொல்லாற்றலால் பெயர் பெற்ற வை.கோ, அங்கிருந்து விலக்கப்பட்ட பின் , தன்னை தனித்துவமான அரசியல் சக்தியாக நிலைநிறுத்த முடியாது போனது ஏன் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சீமான் தற்போது சொல்லும் பிரபாகரனின் நெருக்கமும், ஈழஆதரவு உரையும் அவரிடமும் அளவுக்கதிமாகவே இருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் இன்னல்களைத் தெரிவிப்பதோ, அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களைக் கூறுவதோ தப்பென்றில்லை. அதே சமயம், தமிழகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக வஞ்சிகப்படுகின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வதும், அந்த நிலைகளிலிருந்து மாற்றங்காண அவர்களை அணிதிரட்டுவதும் அரசியல்படுத்துவதும் அவசியமாகிறது. கட்சி அரசியல்வாதிகளின் கயமைத் தனத்தை, ஏழைமக்கள் ஏமாற்றப்படுவதை, விலாவாரியாக விளக்கிச் சொல்லி, கிராமங்களை விழித்தெழச் செய்வது விரைவாக இலக்கினை அடைய உதவும். அதுவே ஆழமான செயற்பாடாவும், அர்ப்பணிப்புடைய செயலாகவும் அமையும்.

வெள்ளந்தியான கிராம மக்கள் மத்தியில் வேசங்கட்டாத மக்கள் பிரதிநிதியாக மாறி, புதிய மாற்றத்தினைக் காணவிழையும் கருத்தியலாளனாக, சிந்தனையாளனாக திகழ்ந்தால் மட்டுமே, தன் பின்னால் அணிதிரளும் மக்கள் கூட்டத்தை, தமிழர்களுக்கான இலக்குவரை அழைத்துச் செல்ல முடியும். அந்த நிலையை அடைய சீமான், சீறும் சிறுத்தையாக இருப்பதைவிட சிந்திக்கும் போராளியாக இருப்பதே சிறந்தது. சிந்திப்பாரா சீமான் ?

நன்றி தமிழ் மீடியா.காம்

Saturday, November 7, 2009

Thursday, October 29, 2009

எம் இனமே..எம் சனமே…..இனி என் செய்வாய்?

உலகில் இன்றைய நாளில் மூன்று இடங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு நின்றிருக்கும் ஈழத்தமிழர்களை யாரும் தமது நாடுகளில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இல்லை.!

முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது………எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.

மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.

அவர்கள் மனிதர்கள்…இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்…நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்…..குப்பைகளல்லர்…நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.

அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்…ஒரே மொழி பேசுபவர்கள்.

அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்…..

கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே……….இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை……..நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்…அவர்களும் நாமும் ஒரினம்..!

பிரிதொன்று…..

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்…அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்….!

அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?

எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?

அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?

காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?

இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?

சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே….சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை…தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?

இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?

அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்……? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?

அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்…? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே…அடிமைகளல்லர்..!

பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்…….
அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?
இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்…யார்க்கும்
இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்………! சீக்கிரம்
இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்…
இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்…!

என் இனமே…என் சனமே.
என்ன செய்து இனி
எம் உடமை காப்பாய்?

என் இனமே..என் சனமே.
என்ன செய்து இனி
எம் பெருமை சேர்ப்பாய்?

என் இனமே..என் சனமே..
என்ன செய்து இனி
எம் நிலத்தை மீட்பாய்?

என் இனமே…என் சனமே..
என்ன செய்து இனி
எம் மக்களைக் காப்பாய்?
வேதனைத் தீயினை அணைப்பாய்?

- நன்றி பாரிஸ்தமிழ்.காம்

Friday, October 23, 2009

விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி (!) அடைகிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் பல விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம். ஆனால் இந்த பதிவு உங்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கான சிறு முயற்சியே!

நம் பேச்சு ,நம் எண்ணம் ,நம் செயல் மற்றும் எதிர்காலம் . இவை அனைத்திலும் "தமிழ்" என்ற மொழி இரண்டற கலந்துள்ளது.ஆனால் இந்த மொழி பேசுகிற ஒரே காரணத்திற்காக நம் இனமே இந்த நாகரிக உலகத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரண காரியங்கள் பிறகு ஆராய்வோம். இன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரந்து பட்டு இருக்கிற நாம் நம் கடமை என்ன என சிந்திப்போம்.

ஈழ குழந்தைகளின் அழுகையும் கண்ணீரும் நம் உறக்கத்தை கலைக்கிறதே இதன் தீர்வு தான் என்ன? இன்று ஈழ தமிழன். நாளை இந்திய தமிழன்! இது தான் வித்தியாசம்.

"நம்மில் பலருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லை. அங்கே தமிழ் என்றால் உயிரே இல்லை." மூன்று கோடி சீக்கியனுக்கும் ஒரு இரண்டு கோடி மலையாளிக்கும் உள்ள உரிமை நமக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன?

உங்களை போலவே இலங்கை தமிழனின் அவலம் என் உறக்கத்தை கெடுத்து கொண்டு தான் உள்ளது. இந்த தேசமும் அரசியலும் இன்னும் எத்தனை தமிழனை பலி கொள்ள போகிறது .

நீ மதுரை - நான் நெல்லை! நீ நாடார் - நான் நாயக்கர்! நீ ஆத்திகன் - நான் நாத்திகன் என்ற வேறுபாடு மறந்து நாம் தமிழன் என்ற உணர்வுடன் ஒன்று கூட இதை விட ஒரு தருணம் வேண்டுமா நண்பனே?

ஆதலால் ஒன்று படுவோம் நண்பர்களே. நண்பர்களாய் மட்டும் அல்ல. தமிழனாகவும் !)
உங்களில் யாவரேனும் இந்த மன நிலையில் இருந்தால் வாருங்கள். புதிய எழுச்சியை உருவாக்குவோம். தமிழன் என்ற தேசிய இனம் மற்றும் அவன் குணங்களை இந்த உலகுக்கு உணர்த்துவோம்.இது யாரையும் தாக்குவதற்கு அல்ல. நம்மை நாம் தற்காத்து கொள்ள.

நான் இங்கே பல நண்பர்களை சந்தித்து விவாதித்து உள்ளேன்.அவர்கள் அனைவரின் எண்ணங்களும் ஒன்று தான். "நாம் ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது தான் அவர்கள் பதில்." மேலும் இதன் தொடர்பில் சென்னை சென்று சில புதிய நண்பர்களையும் சந்திக்க உள்ளேன். அதன் விவரங்களை பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை நீங்கள் உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எனக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நீண்ட விவாதங்களே ஒரு நல்ல செயற்பாட்டின் தொடக்கமாக இருக்க முடியும்.

Thursday, October 15, 2009

உலகம் முழுவதும் பட்டினியில் 100 கோடி மக்கள்!


உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவிக்கிறது.

ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர் [^]கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறை [^]யும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நெடு நாட்களாகி விட்டது. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தை [^]களில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.

1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளனர்.

Tuesday, October 6, 2009

கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!




கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Monday, October 5, 2009

உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக உள்ளதாஉங்கள் கூகிள் மெயில் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள.

உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:

நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .

மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .

இதோ தெரிந்துகொள்ளும் வழி :

உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்.



உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .



இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .

நம் இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.

வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.

Courtesy: http://saidapet2009.blogspot.com

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.



பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்





offline - enable கொடுத்து save செய்யவும்.




பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.




ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.

உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும்.



இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

Wednesday, August 5, 2009

கவிதைகள்

சேம் பின்ச்

என் உடை நிறமும்
உன் உடை நிறமும்
ஒன்றென சாக்லெட் கேட்கிறது
அகதி முகாம் குழந்தை.

****************

அவர்கள் அழுகையை
உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
காரணம்
விமானம் பறக்கும்போது
மேலே பார்த்தால்
உங்களுக்கு சுவாரஸ்யம்
அவர்களுக்கு மரணபயம்.

**********************

உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.

*********************

அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.

*********************
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.

******************
எங்கள் எல்லாருடைய
ரேஷன் கார்டிலும்
இருந்தது ஒரு பெயர்.

‘இறந்துவிட்டார்
எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’
என்கிறார்கள்.

இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.

போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்.

*************************




*************************


தீபாவளிக்கு
வெடித்த வெடிகுண்டை
பீதியுடன் பார்க்கிறது
அகதிமுகாம் குழந்தை.

அவர்களுக்கு
அருகில் இருப்பவர்களாவது
வெடிக்காமல் கொண்டாடுவோம்.

******************
‘நீங்க தமிழா’ என்று
அகதிமுகாமிலிருந்து
ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு
பதில் வந்தது
‘யெஸ்’என்று.

********************
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.

இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

*************************

ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.

*******************

நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.

********************


இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.

********************************************

Thursday, July 9, 2009



" உலகம் உன்னை இறந்தவன் என்கிறது.. உறவுகளோ இறைவனாய் நம்புகிறது... உண்மை தாமதமாகவே வெளிப்பட்டாலும், சாதகமாய் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் நாட்கள் செல்கிறது!!"

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்

உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

Tuesday, May 19, 2009

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்


இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

சொ. சங்கரபாண்டி

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.

வாழ்க தமிழினம்



"தேடிச் சோறுநிதன் தின்று - பல சின்னச் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?"

என் பள்ளி பருவம் தொட்டு நான் என் மனதுக்குள் ரசித்த என் ஹீரோ பற்றி இன்று பல பல செய்திகள். அவை உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனாலும் இதை எழுதும் போது என் மனசு வலிக்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது.
இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது. சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது. சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம். சிலருக்கு திண்டாட்டம் .இனி எதை வைத்து அரசியல் நடத்துவது என்று. இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது. தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள். எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள். அகதிகளாய் சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர). உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது. தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் முகாம்களில் அடைதது வைத்தனர். இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம். நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான். உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான். ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருணாநிதி. அப்புறம் நாம் தமிழர்கள். ஒருநாள் நமது வருங்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ." இதையும் வேறு எதாவது மொழியில் தான் சொல்வார்கள் . ஏனெனில் அப்போது தமிழ் இருக்காது. தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து போய் இருக்கும். என்ன செய்வது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடாமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததற்காகவும் தமிழனாய் இருப்பதற்காகவும் வெட்கப்படுவதோடு வேதனைபடுவதோடு நாம் என்ன செய்ய முடியும். வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான். ஈமெயில் சாட்டில் கடலை போட வேண்டியதுதான். அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .மனசு ரொம்ப வலிக்குது. ஏனெனில் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான். வாழ்க தமிழனம். வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும்

Thursday, April 23, 2009

கலைஞர் அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்...



கலைஞர் அவர்களுக்கு,

எனக்கு அரசியல் விளையாட்டு அந்த அளவுக்குஅதாவது உங்கள் அளவுக்கு தெரியாது எனக்கு.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் அரசியல் அறிந்த வயதில் எம்ஜியார் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார். அதன் பிறகு நீங்கள்தான் இன்று வரை....

நீங்கள் சொல்வது போல் தமிழக அரசியல் எடுத்து யாராவது பேச ஆரம்பித்தால் அதில் உங்களை திட்டியோ அல்லது பாராட்டியோ பேசாமல் தமிழக அரசியல் பேச முடியாது. அது தமிழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததில் இருந்து, வீரானம் வரை எகப்பட்ட சர்ச்சசைகள் உங்களிடம்.
நான் பழய விஷயத்தை கிளற விரும்பவில்லை. அது இப்போதைய தேவையும் அல்ல...

ஆட்சியை பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது எப்போதாவது சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசி இருக்கிறோம், எத்னையோ நண்பர்களின் நல்ல நட்பு உங்களால் பிரிந்து போய் இருக்கிறது.

விட்டு தள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும்.

நீங்களும் திருடர்தான் ஆனால் என்ன கொஞ்சம் நல்ல திருடர்அவ்வளவுதான்.
எல்லோரும் 75 பர்சன்ட் அடித்தால் நீங்கள் பத்திலிருந்து 20 பர்சென்ட் அடிப்பீர்கள். அது எல்லோரும் செய்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட...
கட்சி நடத்த வேண்டுமே?

ஒரு சாதராண தற்க்கொலை கேஸ் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் என்று நீங்கள் கணவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டிர்கள்.

அந்த முட்டாள், இலங்கை தமிழர்கள் வாழ்க என்று குரல் கொடுத்து தீக்கு தன்னை தின்ன கொடுத்தது இருந்தால் அது எப்படியும் சாதாரண தற்கொலை கேசாக மாறி இருக்கும்.

நீங்களும் நிம்மதியாக இருந்து இருப்பீர்கள். அடுத்து கயல் விழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.

செத்த முண்டம் தன் அறிவு தாகத்தை ஒன்று திரட்டி ஒரே நேர் கோட்டில் யோசித்துஇறப்புக்கு பிறகு தன் உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறான் என்றால் யோசித்தவன் எப்படி முன்டமாவான்? அவன் எப்படி யோசிக்கதெரியாதவன் ஆவான்? தமிழகத்தில் உள்ள எல்லோரையும் பதினாறு பக்க கடிதத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு அல்லவா உயிர் துறந்து இருக்கிறான் . அது நீங்களே என் நாங்களே எதிர்பாராதது.


அவன் சமுக கோபத்தை மிக சிறப்பாக பதிவு செய்து விட்டு சென்று இருக்கிறான். இன்றளவும் உங்கள் மேல் மையல் கொண்டவர்கள் முத்துக்குமரன் விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். அல்லது சப்பை கட்டு கட்டுகிறார்கள்

நான் அப்படி அல்ல,


இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ராஜினாமா அறிவித்தது நாங்கள் அல்ல நீங்கள் தான். அதிலேயே உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிப்போனது.
அடுத்ததாக பிரனாப் முகர்ஜி இப்போது அப்போது இலங்கைக்கு போகிறேன் என்று சொன்ன போது நீங்கள் தலையாட்டியது மட்டும் அல்ல...எங்களையும் ஆட்ட வைத்தீர்கள்.

நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.

கடைசியாக பாதுக்காக்கப்பட்ட இடத்தில் குண்டு போடட்டார்கள். அப்போதாவது உங்கள் கண்டனத்தை தெரிவித்தீர்களா ? இல்லையே.

இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் இழப்புகளை சந்திப்பது திமுகதான். இதில் கொடுமை என்ன வென்றால் எப்போதும் எதிர் பேச்சு பேசிய, இந்து ராம் ,சோ,ஜெ,சுவாமி எல்லோரும் நல்லவர்களாகி போய்விட்டார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை, கேட்டாலும் பதில் கிடைக்காது என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் உங்களை கேட்கிறோம்.

தினமும் பிச்சை போடும் பெண்மனிக்குஅன்று வீட்டி்ல் சாப்பாடு இல்லை அதனால் அவள் பிச்சைக்காரனை நாளைக்கு வா என்கிறாள், ஆனால்எப்போதும் பிச்சை போடாத எதிர்வீட்டுக்காரி பிச்சை போட அந்த பிச்சைக்காரன் இப்படித்தான் சொன்னான்.

டெய்லி பிச்சை போடற தேவிடியா இன்னைக்கு போடலை..
என்னைக்கும் பிச்சை போடாத மகராசி இன்னைக்கு போட்டு இருக்கா என்றானாம் அதுதான் உங்கள் இப்போதைய நிலையும்.

அன்று ஜெ சொல்வது போல்தான் இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவுவோம் ஆனால் புலிகளுக்கு உதவமாட்டோம் என்று சொல்கிறீர்கள்...

சோனியாவுக்காக சொல்பவர் என்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து தீக்குளித்த முத்துக்குமரன் குடும்பத்துக்கு ஏன் 2 லட்சம் நிவாரன தொகை அளித்தீர்கள், சவ ஊர்வலத்தில்புலிக்கொடி போர்த்தி புலித்தலைவர் படத்தை எடுத்துபோனார்களே எம் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டியதுதானே?

முடியாது ஏனென்றால் அது ஒரு எழுழ்ச்சி அதை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அடக்கி வாசித்தீர்கள். ஒரு சாதாரன பத்திரிக்கையாளன் தற்கொலை செய்து இறந்ததுக்கு பொதுமக்கள் ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி தன் துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அதை விட கொடுமை மகர ஜோதி, சொர்ககவாசல் திறப்பு என்று நேரலை செய்யும் உங்கள் டிவியும் உங்கள் பேரன் டிவியும் நேரிடி ஒளிபரப்பு செய்யவில்லை.ஒபாபமா பதவியேற்பை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப செய்தீர்கள் முத்து்க்குமாரன் தமிழன் என்பதாலா அல்லது அவன் உண்மை பேசிவிட்டதாலா?

ஏன் ஏன்றால் அவன் எழுப்பிய கேள்வி நியாயமானது...அதில் கிஞ்சித்தும் சுயநலம் இல்லை.

சாதரனமாக தமிழன் ஒகேனெக்கல் கூட்டு குடி நீர் என்றாலே கர்நாடகத்தில் தமிழக பேருந்து மீது கல் வீச்சு நடக்கிறது. நாம் அதை வேடிக்கை பார்த்து 40 நமதே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போதும் உங்களை மட்டும்தான் நாங்கள் நம்பி இருந்தோம் பொதுக்குழுவில் ஏதாவது முடிவு எடுப்பீர்கள் என்று .....
எதிர்பார்த்தது போல் நல்ல முடிவு எடுத்தீர்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதை இன்னும் ஒரு வாரத்துக்கு விரிவு படுத்தி இருக்கிறீர்கள் அவ்வளவே.

இப்போது கூட அனுதினமும் உங்கள் தொலைக்காட்சியில் வருவது போல் கடலில் கட்டு மரம் என்று இனியும் கதை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின தலைவர் என்ற பட்டம் கூட சிலகாலத்துக்கு வேண்டாம் அதை கொஞ்சகாலத்துக்கு தூக்கி தூர போடுங்கள்.
இந்த பதிவு கூட உங்கள் மேல் இன்றளவு நான் வைத்து இருக்கும் மரியாதைக்குதான்.

இன்னும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் நீங்கள் நின்றீர்கள் என்றால் 40ல் ஒன்று கூட தேறாது. இதுதான் அப்பட்டமான உண்மை. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. அதனால்தான் சரத்குமாருக்கு 800 சொச்ச ஓட்டுக்கள்.
மக்களுக்கு தகவல்கள் அசுர வேகத்தில் கிடைத்து விடுகின்றன...

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் மிஞ்சும் ஏனென்றால் நீங்கள் தமிழர்களுக்கு செய்த வாழ்நாள் சாதனைக்காக...

படித்தவர்கள் மொழிப்புலமை பேச்சுத்திறமை எல்லாம் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். பொதுவாக படித்தவர்கள் பிரமனல்லாதவர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் இப்போது
உங்களையே படித்தவர்கள் கேள்வி கேட்க ஆரப்பித்துவிட்டார்கள் என்றால் யோசியுங்கள்...

நீங்கள் மாறன் குடும்பத்தாருடன் இணைந்த நிகழ்வு புகைபடத்தை பார்த்து ரசித்தால் போதாது, புலம் பெயர்ந்த கோடிக்கணக்கான நம் இன இலங்கை தமிழ் மக்கள் தத்தம் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைபடத்தை உவகையுடன் பார்க்க வேண்டாமா?


நான் கூட உங்களை கேள்வி கேட்ட முதல் பதிவும்இதுதான், முதல் கடிதமும் இதுதான். கேள்வி கேட்க காரணமாக இருந்த இன்லெக்சுவல் முத்துக்குமரனுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்




மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் இருந்து இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.

Monday, February 2, 2009

ஒரு சாமானியன் சகாப்தம் ஆனான் !


சென்னை :
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு 29.01.2009 வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.

முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.

அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.