Monday, December 7, 2009

சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?

சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? எதுவாக இருக்கப் போகின்றார் சீமான். பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, உங்கள் பிள்ளை சீமான் வந்திருக்கின்றேன் என ஏறும் மேடைகளில் முழங்கும் சீமானை ஆர்பரித்துக் கைதட்டி வரவேற்கிறது இளைய தமிழகம். உணர்வும், ஆர்வமும் தமிழின்பால் கொண்டிருக்கும் இளைஞர் சீமான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிராமத்துப் பேச்சுமொழியும், தோற்ற நெருக்கமும், உணர்ச்சிப் பேச்சும் சீமான் பால் தமிழ இளைஞர்கள் கவரப்படும் சாத்தியங்களை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் தன்னை ஆர்பரித்து வரவேற்கின்ற இளைய தலைமுறையை எவ்விதம் வழிநடத்தப் போகின்றார் சீமான் ?. அவர்களுக்கு இவர் என்ன சொல்லப் போகின்றார், என்ன செய்யப் போகின்றார் என்பதில்தான் இவரது அரசியல் எதிர்காலமும், இவரை வரவேற்போர் அரசியலும் இருக்கப் போகிறது என்பதுதான நிச்சயமான உண்மை.

இந்த உண்மையின் தாத்பரியத்தை சீமான் உணர்ந்திருக்ககின்றாரா என்பது சரிவரத் தெரியவில்லை. வரும் மே மாதம் அவரது 'நாம் தமிழர் ' இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது செயலின் வீரியம் சிலவேளை புரியவும் கூடும். சிறந்த பேச்சாற்றலும், நிறைந்த தமிழுணர்வும் கொண்டுள்ள சீமானின் அரசியற்பிரவேசம் அர்த்தமற்றதாக போய்விடக் கூடாதென்பதற்கான அக்கறையில் வருகிறது இச்சிறப்புப் பார்வை.

தமிழக அரசியலில் சிறந்த பேச்சாளர்கள், நிறைந்த அரசியற் பிரபலம் பெற்றமை வரலாறு. குறிப்பாகக் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் பலம் பெறுவதற்கான அடிப்படைகளில் அது ஒன்று என்ச் சொன்னால் மிகையாகாது. அண்ணா, கலைஞர், வை.கோ, என்ற வரிசையில, தன் பேச்சாற்றலால் இளைஞர்களைத் திரள வைக்கும் திறமை பெற்றிருக்கின்றார் சீமான் என்பது அவரது அன்மைக்காலப் பேச்சுக்களுக்கு காணப்படும் இளைஞர்களின் ஆர்வத்தில் தெரிகிறது. அந்த இடத்திலேதான் அவரது சமுகங்குறித்த அக்கறைபற்றியும், அரசியல்பற்றியம் கேள்வியும் எழும்புகிறது.

முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது. 'பேச்சும் ஒரு ஆயுதம், ஆதலால் இளைய தலைமுறையிடம் போ, அவர்களிடம் பேசு' எனப் பிரபாகரன் தனக்குக் கட்டளையிட்டதாக மேடைகள் தோறும் கூறிவருகின்றார் சீமான். அப்படிக் கூறும் அவர் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய மற்றொரு விடயம், மக்கள் அரசியலற்ற ஆயுதம், போராட்டத்தில் வெற்றி தராது என்பதை. இதைப் பிரபாகரனின் களத்திலிருந்தம் தெரிய முடியும், வை.கோ வின் இடத்திலிருந்தும் புரிய முடியும்.

ஆகவே உணர்ச்சிப் பெருக்கான பேச்சுக்களால் உடன் திரளும் இளைஞர்களை, உருப்படியான மக்கள் அரசியலாளர் ஆக்குவதற்குரிய பணிகளை ஆரம்பத்திலிருந்தே கவனத்திற் கொள்ளவேண்டும். அப்படியில்லாது கிராமங்கள் தோறும் மேடைகள் போட்டு உணர்சிப்பேச்சுக்களை உரக்கப் பேசுவதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டால். விடிய விடியத் திருவிமாக் கூத்து ஆடியதற்கு ஒப்பாகவிடும் உங்கள் பேச்சுக்கள்.

உண்மையில் பாரிய அரசியல் நகர்வொன்றினை நிகழ்த்த நீங்கள் திட்டம் கொண்டிருந்தால் இன்னமும் ஆழ்ந்து செயற்படுவதே பலன்தருவதாகும். அதுவன்றி கூவிக் குரல் எழுப்புவதால் உங்கள் எண்ணம் ஈடேறாது. ஏனென்றால் நீங்கள் எல்லாப் பக்கங்களிலும் குறி வைக்கப்படுகின்றீர்கள் என்பது உண்மை. அதற்குக் காரணம், அரசியல் பொய்மைகளில் மனம் புழுங்கிப் போயுள்ள, தமிழகத்தின் இளைய சமுதாயம், உங்கள் பின்னால் அணிதிரளும் வாய்ப்பு உள்ளதென்பதே.

ஈழ அரசியல் குறித்தும் , தமிழக அரசியல் குறித்தும், அனைத்து அரசியல்வாதிகளிலும் அதிருப்தியுற்றே இளைய தமிழகம் இருக்கிறது என்பதற்க சிறப்பான உதாரணம் முத்துக்குமரன் இறுதி நிகழ்வு. அதுபோல் கொந்தளித்துப்போயுள்ள அந்த இளைய தலைமுறைத் திரட்சியை, ஒருங்கமைத்து வழிநடத்தக் கூடிய, சுயநலமற்ற, நடைமுறை அரசியற்தலைமை இல்லாதிருப்பது அவலம். இநத் அவலத்துள் ஆட்பட்டிருக்கும் இளைய சமூகம் எங்கே உங்கள் பின்னால் அணி திரண்டுவிடுமோ என்ற அச்சம் அனைத்து அரசியற் தரப்பிலும் எழுந்தேயிருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள் என்பதே முக்கியமான கேள்வி?

ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலைக்குப் பின்னதாக, அந்தக் கொலைகளின் துரோகம் குறித்து, வெளிப்படையாகப் பேசும் ஒரு சில குரல்களில், ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலாக தெரிவது சீமானின் குரல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீமானின் உரத்த குரலில் வெளிப்படும் உணர்ச்சிப் பேச்சுக் கேட்கத் திரளும் மக்கள் மத்தியில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட ஊடகங்களினால் மறைக்கப்பட்ட தமிழினத் துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் துரோகங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவதும் அவர்தான்.

தமிழகத்தில் அரசியற்துரோகங்களால் அல்லற்பட்டும், தமிழனாக அவமானப்பட்டும் நிற்பதாகக் கருதும் எவனுக்கும் சீமானின் வார்த்தைகள் உயிர்ப்பூட்டுகிறது.

இயல்பாகவே எழும் கிராமத்துக் கோபம் மிக்கச் சீமான், சினிமாக்காரனாகச் சிரித்தபடிதான் திரிந்தார். ஆனால் அவரைச் சீண்டி, சினந்தெழுந்த கிராமத்தான் மாற்றியவர்கள், அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்தான். அவர்களது அராஜகங்களால் அடிபட்டு நொந்து போய்கிடந்த இளைய சமூகத்துக்கு, சீமானின் குரல் தன் குரலாய் தெரிகிறது. அதனால் அவர் பின்னே திரளுகின்றனர். திரளுகின்ற அந்த இளைய தலைமுறையை எப்படி பயனுள்ள போராட்ட சக்தியாக மாற்றப் போகின்றார் என்பதிலேயே சீமானின் எதிர்காலமும், அவரின் பின்னால் அணிதிரளும் இளைய சமூகத்தின் எதிர்காலமும் இருக்கிறது. அந்த அவதானிப்பில் தான் பின் வரும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தனது முதற் சுட்டியாக எடுத்து தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை மையப்படுத்த முனையும் சீமான் கவனத்திற் கொள்ள வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இந்தப் பத்தியில் தர முடியாது போனாலும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்ய முனைவது நோக்கமாகின்றது.

தமிழக அரசியலில் தனித்துவமான சக்தியாக மாறவிழையும், சீமானும் , அவரது நாம் தமிழர் இயக்கமும் பயனிக்க வேண்டிய தூரம் நெடுந்தொலைவு. இந்த நெடுதூரப் பயணத்திற்கும் , தமிழக அரசியற் சக்தியாக அடையாளப்படுத்துவதற்கும், ஈழவிடுதலைப்போராட்ட எண்ணப்பாடு மட்டும் போதுமானதாக இருக்காது. தமிழகமக்கள் பலருக்கும் ஈழத்தமிழ்மக்கள் மீது கரிசனமும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறையும், நிறைந்த தமிழுணர்வும் இருந்தாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அது மட்டும் போதென்பதே தமிழகத் தேர்தற் களம் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடம். அதனாலேதான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிவரும் எவரும் தேர்தல் வரும்போது, பெரிய கட்சிகளுக்குள் சரண்புகுந்துகொள்கின்றனர்.

இதற்கு தமிழக அரசியலில் சிறப்பான உதாரணமாகச் சொல்லக் கூடியவர்கள் இருவர். முதலாமவர் நீண்டகாலமாக ஈழப்பிரச்சனையை எடுத்துப் பேசிவரும் மதிமுக செயலர் வை.கோபால்சாமி. மற்றையவர் விடுதலைச்சிறுத்தைகளி்ன் தலைவர் தொல். திருமாவளவன். ஈழப்பிரச்சனை, தமிழுணனர்வு என்பன குறித்து எழுச்சிமிக்க கருத்துக்களை எவ்வளவு தூரம் தமிழக மக்களிடம் முன்வைத்து நின்றாலும், தேர்தற்களமொன்றைக் காணும் தருணத்தில் , இவர்கள் தடுமாறிப்போவது தொடர்ச்சியாக நிகழ்ந்தே வருகிறது. இதற்குக் காரணம் தேர்தற்களத்தில் வெற்றியைத் தரக் கூடிய வாக்குக்களைப் பெற்றுக் கொள்ளும் காரணியாக ஈழப்பிரச்சனையோ, தமிழுணர்வோ மட்டும் அமைந்துவிடவில்லை என்பதே .

இந்த அரசியல் நிலை அவர்களுக்கு மட்டுமல்ல, சீமானுக்கும் பொருந்தும், ஏன் வேறு யாருக்கும் கூட ஏற்படலாம். 1983ல் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த அரசியற் போராட்டங்களில் ஈடுபட்ட ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்து, தலித் மக்கள் பிரச்சனையையும் இணைத்துக் கொண்ட தொல். திருமாவளவனால், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் எதுவும் செய்ய முடியாது போய்விடுகிறது. இதற்காக அவரது ஈழ ஆதரவினைக் குறைத்து மதிப்பிட முடியாது. இவரது அரசியற் பிரவேச காலத்தையும், இப்போதுள்ள காலத்தையும், தமிழக அரசியலில் நிலைகொள்வதற்கான வாக்கு வங்கியை உருவாக்குவது குறித்தும் , சீமான் அதிக கவனம் கொள்ள வேண்டியதும் அவசியம். உன்மையில் இதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்கள் வேறு சிலவும் இருக்கின்றன. ஆயினும் மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதாலும், அரசியற் பிரவேச நிலையில் நிற்பவர் சீமான் என்பதாலும் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.

அரசியலில் நிலை கொள்ள மிகஅவசியமானது தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் வாக்குகள். தமிழகத்திற்கென்றில்லாது உலகத்தக்கே பொதுவான விதியது. ஆனாலும் தமிழகத்தில் இந்த வாக்கு வங்கிகளாக இருப்பவை சாதிய அமைப்புக்கள். இந்த விதியினை உடைத்து, தமிழர் எனும் பொதுமையைக் காணவிழையும் சீமானின் முயற்சி புதுமையானதும் வரவேற்கத் தக்கதும். கட்சி கடந்த ஒரு பொதுமையை கண்டடைவது என்பது பேசுவது போல் ஒன்றும் இலகுவானதல்ல. அதற்கு வேண்டிய களமும், காலமும் மிகப் பெரியது.

'என் பின்னால் மூன்று இலட்சம் தம்பிமார் இருக்கிறார்கள் ' என மேடைகளில் சொல்வது புலம் பெயர் தமிழர்களின் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் தமிழக அரசியலில் மாற்றம் தருவதற்கு,இந்த தொகையின் பத்துமடங்கு திரண்டாற் கூட, அது சொற்பமா கத்தான் இருக்கும். இப்படிச் சொல்வது சீமானால் அப்படியொரு நிலையை எய்துவிட முடியாது எனும் பொருளல்ல. மாறாக இன்னமும் செல்ல வேண்டிய தொலைவின் நீட்சியைச் சுட்டவே.

மேலும் திருமாவளவன் ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துப் பேசி கட்சி வளர்த்த காலத்தில், தமிழக, மத்திய அரசுகளின் ஈழநிலைப்பாட்டிற்கும் தற்போதுள்ள நிலைப்பாட்டிற்குமான களநிலை நேரெதிரானது. அதுபோலவே ஈழத்தில் அப்போதிருந்த போராட்ட முனைப்புச் சூழ்நிலை முற்றாக மாறி, தேக்கநிலையே காணப்படுகிறது. நீளப் பயனிக்க நினைக்கும் சீமான் நிச்சயம் இந்த நிலைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடக்கப்பட்டதற்கே, உலக வரைபுகளில் உரைக்கப்பட்ட நியாயம் 'தீவிரவாதம்' என்பதே. அப்படி இருக்கையில், அரசியற' கட்சியாகப் பரிமளிக்கவிரும்பும் சீமான், தனது மேடைப்பேச்சுக்களில் குண்டுகளாய் வெடிப்போம் என்பதும், மாற்று இனம் மீது வஞ்சம் தீர்ப்போம் எனச் சூளுரைப்பதும், அவரை அடக்க நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். அதைவிடவும், வெடிப்போம் அழிப்போம் என்பதனை கட்சிக் கொள்கையாகக் காட்முடியுமா? அல்லது அதையொரு போராட்ட நடைமுறையாகக் கொள்வதானல் கூட, ஈழத்தில் இது இனிச் சாத்தியமில்லை என்றுதானே விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்தார்கள் என்றார்கள். அப்படியிருக்கும் போது அந்த வடிவத்தை உயிர்பிப்பதாகக் கூறுவது நடைமுறைச் சாத்தியமானதா?.

இவ்வாறு சீமான் உரைக்கும் போதேல்லாம், சீமானும் சரி , அந்த உரைக்கு அக மகிழ்ந்து கைதட்டுவோரும் சரி சுலபமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். இத்தகைய உரைகளும், உணர்ச்சி வசப்படுதல்களும், சிங்களத்தால் சிறைப்பட்டுக் கிடக்கும் போராளிகளின் முன் உள்ள சிறைக்கதவுகளில் மேலும் கம்பியினை பொருத்திவிட உதவுகின்றார்கள் என்பதனை.

மேலும் பிரபாகரன் என் தலைவன் எனக் கூறும் சீமான, புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம், 83ல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்த போதும், 83க்கு முன்னர் சில ஆண்டுகளும், பின்னர் 85 வரையிலும் தங்கள் செயற்பாடுகளை மிக அமைதியாகவும், இரகசியமாகவும் வைத்திருந்தார்கள் என்பது. ஆக சரியான காலம் வரும் வரையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின் சக்தி என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை.அது ஒரு இரகசிய இயக்கத்திற்குச் சரியான நடைமுறை. ஆனால் அரசியல் இயக்கமாக மலர நினைக்கும் சீமானின் 'நாம் தமிழர்' அப்படி அமைய முடியுமா எனக் கேட்டால், அது அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெறும் வரையிலாவது அந்த நடைமுறை அவசியம் என்றே சொல்லலாம்.

தனது அரசியற் பிரவேசத்திற்கு உணர்ச்சிகரமான தனது பேச்சுத் திறனை அடித்தளமாக சீமான் இடுவதில் தவறில்லை. ஆனால் அந்தஅடித்தளத்திலிருந்து கோபுரமாக உயர உரைகள் மட்டும் போதுமானதாக இல்லை. அப்படி அது போதுமென்பது உண்மையானால், திமுகவிலிருந்த போதே தனது சொல்லாற்றலால் பெயர் பெற்ற வை.கோ, அங்கிருந்து விலக்கப்பட்ட பின் , தன்னை தனித்துவமான அரசியல் சக்தியாக நிலைநிறுத்த முடியாது போனது ஏன் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சீமான் தற்போது சொல்லும் பிரபாகரனின் நெருக்கமும், ஈழஆதரவு உரையும் அவரிடமும் அளவுக்கதிமாகவே இருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் இன்னல்களைத் தெரிவிப்பதோ, அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களைக் கூறுவதோ தப்பென்றில்லை. அதே சமயம், தமிழகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக வஞ்சிகப்படுகின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வதும், அந்த நிலைகளிலிருந்து மாற்றங்காண அவர்களை அணிதிரட்டுவதும் அரசியல்படுத்துவதும் அவசியமாகிறது. கட்சி அரசியல்வாதிகளின் கயமைத் தனத்தை, ஏழைமக்கள் ஏமாற்றப்படுவதை, விலாவாரியாக விளக்கிச் சொல்லி, கிராமங்களை விழித்தெழச் செய்வது விரைவாக இலக்கினை அடைய உதவும். அதுவே ஆழமான செயற்பாடாவும், அர்ப்பணிப்புடைய செயலாகவும் அமையும்.

வெள்ளந்தியான கிராம மக்கள் மத்தியில் வேசங்கட்டாத மக்கள் பிரதிநிதியாக மாறி, புதிய மாற்றத்தினைக் காணவிழையும் கருத்தியலாளனாக, சிந்தனையாளனாக திகழ்ந்தால் மட்டுமே, தன் பின்னால் அணிதிரளும் மக்கள் கூட்டத்தை, தமிழர்களுக்கான இலக்குவரை அழைத்துச் செல்ல முடியும். அந்த நிலையை அடைய சீமான், சீறும் சிறுத்தையாக இருப்பதைவிட சிந்திக்கும் போராளியாக இருப்பதே சிறந்தது. சிந்திப்பாரா சீமான் ?

நன்றி தமிழ் மீடியா.காம்

0 comments: